சென்னை, கொரோனா பாதித்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூய்மை பணியாளர் இன்று (மே 10) உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பலி 45 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக 6,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 7 ம் தேதி முதல், நோய் கட்டுப்பாட்டு பகுதியான ராயபுரத்தில் துப்புரவு பணியை 58 வயது நபர் செய்து வந்தார்.
இவர் சென்னை மாநகராட்சி பணியாளர் ஆவார். இவர் ஏழுகிணறு பகுதியில் கொண்டிதோப்பை சேர்ந்தவர்.
இவருக்கு நேற்று முன் தினம் முதல் அதிகமான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர் நேற்று இரவு வரை எந்த வித பாதிப்பும் இல்லாமல் உடல்நிலையும் சீராக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இன்று அதிகாலை திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டார்.
அவர் 10 ஆண்டுகளாக நீரிழிவு நோய்க்கு மருந்து உட்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
வேறு ஒரு துப்புரவு பணியாளரிடம் இருந்து இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
கொரோனாவுக்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது முதல் முறையாக தூய்மை பணியாளர் உயிரிழந்துள்ளார்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லேசான காய்ச்சல் காரணமாக ஒரு துப்புரவு தொழிலாளி இறந்தார், ஆனால் அவருக்கு கொரோனா இல்லை.
இதனையடுத்து தமிழகத்தில் உயிரிழப்பு 45 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து, தூய்மை பணியாளர் ஒருவர் உயிரிழப்பது தமிழகத்தில் இது முதல்முறையாகும்.