மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை அடுத்து மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகாித்து கொண்டே வருகிறது.
மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் உயிரிழப்பு கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் மதுரையில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.
இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் தங்கியிருந்த பகுதியை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,003 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் இருந்த நிலையில் ஒரே வாரத்தில் 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்று அதிக கொரோனா பாதிப்பை பதிவு செய்த மாவட்டங்கள் பட்டியலில் மதுரை, 2வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.