புதுச்சேரியில் புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று

புதுச்சேரியில் புதிதாக 31 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத் துறை செயலாளர் அருண் இன்று (மார்ச் 13) வெளியிட்டுள்ள தகவல்:

“புதுச்சேரி மாநிலத்தில் 1,199 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், புதுச்சேரியில் 23 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், மாஹேவில் 5 பேருக்கும் என 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.

இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 15 ஆக உயர்ந்துள்ளது. இதில், மருத்துவமனைகளில் 87 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 104 பேரும் என 191 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 670 ஆகவும், இறப்பு விகிதம் 1.67 சதவீதமாகவும் உள்ளது.

இன்று 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 154 (97.85 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 6 லட்சத்து 45 ஆயிரத்து 530 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 5 லட்சத்து 99 ஆயிரத்து 124 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

புதுச்சேரியில் 12 ஆயிரத்து 367 சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்கும், 4 ஆயிரத்து 273 முன்களப் பணியாளர்களுக்கும், 7 ஆயிரத்து 847 பொதுமக்களுக்கும் என 24 ஆயிரத்து 487 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே