தமிழகத்தில் இன்று மட்டும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 834 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்கள் கொரோனா பாதிப்பு முதலிடத்தில் உள்ளனர்.
தற்போதுவரை இந்தியாவில் 5,865 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 169 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், ‘கொரோனா வைரஸ் பாதிப்பை துரிதமாகவும் துல்லியமாகக் கண்டறியக்கூடிய ரேபிட் கருவி இன்றிரவு தமிழகத்துக்கு வருகிறது.
முதற்கட்டமாக 50,000 கருவிகள் தமிழகத்துக்கு வருகின்றன. இந்தக் கருவிகள் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா பாதிப்பைக் கண்டறிந்துவிடலாம்.
தற்போது கொரோனா அறிகுறியுடன் 213 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை. இதுவரையில் கொரோனா பாதிப்பால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரையில், 7267 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று மட்டும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில், 86 பேர் ஒரே இடத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
மீதமுள்ள 10 பேருக்கு வேறு காரணங்களால் கொரோனா பரவியுள்ளது.
இதுவரையில் 27 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
59,000 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் இதுவரையில் 834 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.