ட்ரம்ப்பிற்கு மீண்டும் கொரோனா சோதனை?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட கரோனா பாதிப்பு பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்; அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 373 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், டிரம்ப் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொண்டார்.

இந்நிலையில், தனக்கு நோய்த்தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பரிசோதனை எப்படி செய்யப்படுகின்றன. எவ்வளவு விரைவாக அறிக்கையை அளிக்கின்றனர் என்பதை தெரிந்துகொள்வதற்காகவே இரண்டாவது முறையாக சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டதாக டிரம்ப் கூறினார்.

மேலும் ஒரு நிமிடத்தில் பரிசோதனை முடிந்துவிட்டதாகவும், 15 நிமிடங்களில் பரிசோதனை முடிவு வந்துவிட்டதாகவும், பரிசோதனை முடிவுக்காக காத்திருக்காமல் தனது பணிகளை கவனிக்க சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே