அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா நிவாரணம் – தொல். திருமாவளவன் கோரிக்கை..!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் உதவித்தொகை ரூ.5,000, கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பானது, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊடகவியலாளர்களுக்கு அரசு அங்கீகாரம் என்பது தற்போது மிகச் சிலருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் மிகப்பெரிய நிறுவனங்களில் கூட 11 பேருக்கு மட்டுமே அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

உண்மையிலேயே உதவித்தொகை தேவைப்படும் ஊடகவியலாளருக்கு இந்த தொகை கிடைக்கவில்லை. எனவே தற்போது உள்ள விதிகளை ஒருமுறை தளர்த்தி அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களின் அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து ஊடகவியலாளருக்கும் ரூ. 5,000 உதவித்தொகை கிடைப்பதற்கும், உயிரிழந்தால் ரூ. 10 லட்சம் நிவாரணம் கிடைப்பதையும் உறுதி செய்யுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே