போகிறபோக்கில் கொரோனா லைட்டா டச் பண்ணிட்டு போயிருச்சு – அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார்.

கொரோனோ நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து மதுரை திரும்பியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கோரிப்பாளையத்தில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகம் முன்பாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “வடிவேலு சொன்னது போல போகிறபோக்கில் கொரோனா டச் பண்ணிட்டு போயிருச்சு. இப்போது குணமடைந்து விட்டது.” எனத் தெரிவித்தார்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து திரும்பிய அமைச்சரை வரவேற்க அவருடைய ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் திரளாகக் கூடியிருந்தனர்.

மேலும் இதற்காக அமைக்கப்பட்ட மேடையிலும் முண்டியடித்துக்கொண்டு நின்றனர்.

கொரோனா எளிதாகப் பரவும் அபாயம் அறிந்தும், கொரோனாவில் இருந்து குணமடைந்த அமைச்சரை வரவேற்க சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் அ.தி.மு.க-வினர் கூடியது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே