கொரோனா விழிப்புணர்வு – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்..!!

கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாத்திட அனைவரும் முகக்கவசம் அணியுமாறும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றை முதல்வர் ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் பேசியதாவது: இது கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். முடிந்தளவு வீட்டிற்குள்ளேயே இருங்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியில் சென்றாலும் தனி மனித இடைவெளியை கடைப்பிடியுங்கள். தொற்றில் இருந்து பாதுகாத்திட மிக முக்கியமானது முகக்கவசம். 

இதனை அனைவரும் அணிய வேண்டும். மூக்கு, வாய்யை மூடியிருக்கும் வகையில் முழுமையாக போட வேண்டும்.மருத்துவமனை, பேருந்து, கடைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்போது இரண்டு முகக்கவசங்கள் அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கிருமிநாசினியால் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துங்கள். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது தடுப்பூசி போட்டுக்கொள்வது.

இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக்கொள்ளுங்கள். சிலருக்கு காய்ச்சல், உடல்வலி வந்தாலும் ஒரேநாளில் சரியாகிவிடும். மாஸ்க் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவைகளால் கொரோனா தொற்றிடம் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றிடலாம். கொரோனா இல்லாத தமிழகம் அமைப்போம். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே