குஜராத்தில் கரோனா 2-ம் அலை தீவிரம்; அகமதாபாத்தில் பேருந்துகள் நிறுத்தம்: சினிமா தியேட்டர்கள் மூடல்

குஜராத் மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலை பரவும் சூழலில் தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது. இதனையடுத்து அகமதாபாத் நகரில் சினிமா தியேட்டர் உள்ளிட்ட பொழுது போக்கு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் பலமுறை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

எனினும் மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதன்பின் கடந்த செப்டம்பரில் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டது. அப்போது நாளொன்றுக்கு 90,000 முதல் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த பிப்ரவரிமுதல் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

நாட்டின் சில மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மற்ற பல நாடுகளில் ஏற்பட்டுள்ளதை போல இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை உருவாகுவதை தடுத்து நிறுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

இந்தநிலையில் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.

குஜராத் மாநிலத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலை பரவும் சூழலில் தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பரவல் 1,122 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 100 நாட்களுக்கு பிறகு எட்டியுள்ளது.

இதனையடுத்து அகமதாபாத் நகரில் சினிமா தியேட்டர், ஜிம், பூங்காக்கள், நீச்சல் குளம் உள்ளிட்ட பொழுது போக்கு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் இயக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடைகள், சந்தைகள் போன்றவை கடுமையான கட்டுப்பாடுகளுடன் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே