குமாரசாமி மகன் திருமண விழா குறித்து சர்ச்சை

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மகனுமான நடிகர் நிகில், பெங்களூருவை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மந்திரி கிருஷ்ணப்பாவின் சகோதரர் பேத்தி ரேவதி ஆகியோருக்கு 17-ந் தேதி (நேற்று) ராமநகரில் மிக பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெறும் என்று குமாரசாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதையடுத்து தனது மகன் திருமணம் மிக எளிமையாக குடும்பத்தினர் முன்னிலையில் ராமநகர் மாவட்டம் பிடதி அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று குமாரசாமி அறிவித்தார்.

அதன்படி பிடதி அருகே உள்ள பண்ணை வீட்டில் குமாரசாமியின் மகன் நிகிலுக்கும், ரேவதிக்கும் இடையே திருமணம் நேற்று காலை ஒக்கலிக சமூக முறைப்படி நடந்தது.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அவரது மனைவி சென்னம்மா உள்பட குடும்பத்தினர் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது.

இதில் குடும்பத்தினர், நெருங்கிய உறவுகள் என சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். 45 கார்களுக்கு போலீசார் அனுமதி வழங்கினர்.

திருமணம் நடந்த அந்த பண்ணை வீட்டின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

ஆனால் குமாரசாமி மகன் திருமணத்தில் முக கவசம் அணியவில்லை என்றும்; சமூகவிலகலை கடைப்பிடிக்கவில்லை என்றும், 400-க்கும் மேற்பட்ட கார்களில் பலர் கலந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே