ரியா சக்ரபோர்த்தி என் மகனுக்கு விஷம் கொடுத்துள்ளார் என, சுஷாந்த் சிங் தந்தை பரபரப்பான குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் அவரது தந்தை பாட்னா போலீசில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது புகார் அளித்தார்.
அதில் ரியா தனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாகவும் மற்றும் பணமோசடி செய்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ., வசம் வந்துள்ளது.
இதற்கு சுப்ரீம் கோர்ட்டும் அனுமதி அளித்தது.
இதையடுத்து சி.பி.ஐ., போலீசார் மும்பையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை பாந்த்ரா காவல் நிலையம், சுஷாந்த் சிங் வீடு உள்பட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நேற்று நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்குப்பதிவு செய்தது. அவர்கள் விசாரணைக்காக மும்பை விரைந்துள்ளனர்.
இந்நிலையில் மகன் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ரியா சக்ரபோர்த்தி விஷம் கொடுத்துள்ளார் என, அவரது தந்தை கே.கே. சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை கே.கே.சிங் கூறுகையில், ”என் மகனுக்கு ரியா சக்ரபோர்த்தி விஷம் கொடுதுள்ளார்.
அவரை கட்டாயம் கைது செய்ய வேண்டும். எனது மகனுக்கு போதைப்பொருள் கொடுத்து, கொலை செய்துள்ளார்,” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.