ஹோட்டல் திறப்பதற்கு நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதிய டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் ஒருவர் புகார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக தலைமறைவாக இருந்துகொண்டு தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் அவர், தனது நாட்டுக்கான தனி கொடி, ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

விநாயகர் சதுர்த்தி அன்று கைலாச நாட்டில் வர்த்தகம் செய்ய 5 வகையான நாணயங்களை வெளியிட்டார்.

இதனையடுத்து, கைலாசாவில் ஓட்டல் திறப்பதற்கு அனுமதி கோரி மதுரையை சேர்ந்த டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் என்பவர் கடிதம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், ஹோட்டல் துவங்குவதற்கு தனது நிர்வாகிகளிடம் முன்னுரிமை அளிக்க செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

மேலும், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஹோட்டல் திறப்பதற்கு நித்யனந்தாவிற்கு கடிதம் எழுதிய டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் முத்துகுமார் என்பவர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், நித்தியானந்தாவை நல்லவர் போல் காட்டும் முயற்சியில் டெம்பிள் சிட்டி உரிமையாளர் குமார் ஈடுபடுவதாகவும்; அரசால் பல்வேறு புகாரின் அடிப்படையில் தேடப்பட்டு வரும் குற்றவாளிக்கு ஆதரவு தருவதாக கூறி, ஹோட்டல் உரிமையாளர் குமாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே