உதகையில் களைகட்டும் சாக்லெட் திருவிழா

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உதகையில் தொடங்கி உள்ள சாக்லேட் திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சாக்லேட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் தனி ருசி தான்.

இந்தியா முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வரும்போது இந்த சாக்லேட்டை தவறாமல் வாங்கி செல்வார்கள்.

அதேபோல் ஆண்டுதோறும் ஊட்டியில் சாக்லேட் திருவிழா நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சாக்லேட் திருவிழா தற்போது தொடங்கியுள்ளது. 

தனியார் நிறுவனத்தின் சார்பாக 15 நாட்கள் நடைபெறும் இந்த சாக்லேட் திருவிழாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு விதமான சாக்லேட் தயாரிப்புகள் காட்சிகளுக்கு வைக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டை வரவேற்கும் வகையில், 120 கிலோ எடை கொண்ட சாக்லேட்டால் தயாரிக்கப்பட்ட 2020 ஆண்டு வடிவிலான சாக்லேட் உருவம் பார்ப்போரை கவர்ந்துள்ளது.

கீழடியில் கிடைத்த பழங்கால பொருட்களில் பொறிக்கபட்டுள்ளது போன்று எழுதப்பட்டுள்ள பிராமி, தமிழி போன்ற எழுத்துகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அத்துடன் மூங்கில் அரிசி, தினை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட 8 தானியங்களை கொண்டு உருவாக்கபட்ட சாக்லேட்டுகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

ஒரு கிலோ 300 ரூபாய் முதல் கிலோ 3500 ரூபாய் வரை விலை கொண்ட சாக்லேட் வகைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

உதகைக்கு சுற்றுலாவிற்கு வருகை தரும் பயணிகளுக்கு சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இருந்தாலும், தற்போது இந்த திருவிழாவும் ஒரு பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே