ரூ.441 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தமிழகத்திலேயே மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரமான சேலத்தில் பல்வேறு நகரங்களுக்கு நேரடி போக்குவரத்து சேவை உள்ளது.
இதனால், சேலம் மாநகரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனை சரி செய்ய புதிய ஈரடுக்கு மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, ரூ.320 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்திருந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு 25-ம் தேதி ஜெயலலிதா அடிக்கல் நாட்டி பாலத்தின் பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மேம்பாலம் மதிப்பீட்டு ரூ.441 கோடியாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், இந்த நீண்ட ஈரடுக்கு மேம்பாலத்தின் பணி முடிந்த நிலையில் பொதுமக்கள் சேவைக்காக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
7.87 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் தமிழகத்திலேயே மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, புரட்சி தலைவி அம்மா என்று பாலத்திற்கு முதல்வர் பழனிசாமி பெயர் சூட்டினார்.
மேலும், ரூ.286.15 கோடி மதிப்பீட்டில் 35 புதிய பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமியுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.