பயிர் கடன் ரத்து ரசீதை நாளை வழங்குகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!!

கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி 110-வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், குறிப்பாக கொரோனா, புரவி மற்றும் நிவர் புயல்கள், ஜனவரி மாத மழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் பெற்ற 12,110 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு உண்டான அரசாணையையும் தமிழக முதல்வர் வெளியிட்டு, அதற்கான நிதி ஆதாரத்தையும் வருகின்ற நிதிநிலை அறிக்கையிலேயே ஏற்படுத்தவும்; இந்த அறிவிப்பு உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

தமிழக அரசு வெளியிட்ட அந்த அரசாணையில், “தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் ரூபாய் 12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான நிதி, அரசால் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பயிர் கடன் ரத்து செய்யப்பட்டுதற்கான ரசீதை வழங்க உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே