சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் நேரடி வழக்கு விசாரணை

கொரோனாவால் காணொளி விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று நீதிமன்றங்களில் நேரடி விசாரணை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டது.

அதனுள் நீதிமன்றங்களும் ஒன்று.

வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பொதுமக்கள் என பலர் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்பதால், நீதிமன்றங்கள் மூடப்பட்டு முக்கிய வழக்குகள் காணொளி வாயிலாக விசாரிக்கப்பட்டு வந்தது.

கடந்த 5 மாதங்களாக இந்த நடைமுறையே அமலில் இருந்தது.

இதனையடுத்து மீண்டும் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்துவது குறித்து நீதிபதிகள் தலைமையிலான கூட்டம் ஆலோசனை நடத்தியது. 

அக்கூட்டத்தில் 7 ஆம் தேதி முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தலாம் என்றும் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

அதே போல செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் கீழமை நீதிமன்றங்களிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன் படி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு அமர்வுகளிலும் நேரடி விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரு அமர்வில் 3 நீதிபதிகளுடன் விசாரணை நடைபெறுகிறது. அதே போல கீழமை நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை தொடங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே