அரியர் விவகாரத்திலும் மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றுவதா? – டிடிவி தினகரன் கண்டனம்

அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம், கல்லூரி மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் அரசு தெளிவான முடிவு எடுக்காமல் பெற்றோர்களையும், மாணவர்களையும் ஏமாற்றுகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

இதை அடுத்து பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. கல்லூரி

மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்க யூஜிசி எதிர்ப்பு தெரிவித்தது.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அரியர்ஸ் அனைத்தும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. 

இதை எதிர்த்து அகில இந்திய தொழில்நுட்பக்கழகம் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் தமக்கு எதுவும் கடிதம் வரவில்லை என அமைச்சர் மறுத்தார்.

மறுபுறம் யூஜிசி முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனால் அரசு எடுத்துள்ள முடிவால் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.

தேர்ச்சியா? இல்லையா? என்கிற நிலையில் பெற்றோரும் மாணவர்களும் உள்ளதை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

‘நீட் தேர்வில் நடந்து கொண்டதைப் போலவே அரியர் தேர்ச்சி விவகாரத்திலும் தமிழக மாணவர்களையும் பெற்றோர்களையும் பழனிசாமி அரசு நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறது.

அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்புக்கு எதிராக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அனுப்பிய கடிதம் தற்போது வெளியாகி இருக்கிறது.

அப்படி ஒரு கடிதமே தங்களுக்கு வரவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் சொன்னது எப்படி?

கோடிக்கணக்கில் செலவழித்து பத்திரிக்கைகளில் விளம்பரங்களை கொடுத்தும், ஊரெங்கும் சுவரொட்டி அடித்தும் ஒட்டிக்கொண்டதில் காட்டிய அக்கறையில் துளியையாவது மாணவர்களின் மீது செலுத்தி அரியர் தேர்ச்சி விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்று தமிழக அரசு உடனடியாக விளக்கவேண்டும்’.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே