திருமலை திருப்பதி ஏழுமலையான் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகர் சிவகுமார் மீது ஆந்திர மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் திரைப்படத்துறையின் மூத்த நடிகர் சிவக்குமார், தனது மனதில் தோன்றும் கருத்துகளை அப்படியே பொதுவெளியில் பேசிடுவது, பலமுறை அவரை சர்ச்சையில் சிக்கவைத்துள்ளது.
கடந்த ஆண்டு கல்லூரி ஒன்றில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற சிவக்குமார், இலக்கியம், ஆரோக்கியம், இல்லறம் என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது, தான் திருப்பதி கோவிலுக்கு செல்வதில்லை என்றும் அங்கு கால்நடையாக நடந்து செல்லும் பக்தர்களை மதிக்காத தேவஸ்தானம், கொஞ்சும் குமரியுடன் இரவெல்லாம் கூத்தடித்து விட்டு காலையில் குளிக்காமல் சாமி கும்பிட செல்லும் செல்வந்தர்களுக்கு கும்பத்துடன் மரியாதை அளிப்பதை தான் நேரில் பார்த்ததாக தெரிவித்தார்.
இந்த வீடியோவை தமிழ்மாயன் என்பவர் திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனை ஆய்வு செய்த தேவஸ்தான அதிகாரிகள், திருப்பதி கோயிலுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி திருமலை காவல் நிலையத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து நடிகர் சிவகுமார் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்று திருமலையில் இருந்து புத்தர் சிலையை எடுத்துவிட்டு, ஏழுமலையான் சிலை நிறுவியதாக முகநூலில் பதிவிட்டவர் உள்ளிட்ட பலர் மீதும் திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதனை அடிப்படையாக வைத்து நடிகர் சிவகுமார் உள்ளிட்ட 12 பேர் மீது ஆந்திர மாநில காவல் நிலையத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் விஜிலன்ஸ் பிரிவு புகாரளித்தது.
இதனையடுத்து இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.