மீன் சாப்பிட்டால் புற்றுநோய் வராது – அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்

மீன் உணவு சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு, புற்றுநோய், தோல் நோய் உள்ளிட்ட எந்தப் பிரச்சினையும் வராது என அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின் போது பேசிய காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், வீராணம் ஏரியில் பல்வேறு வகையான மீன் வகைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கட்லா, ரோகு,  ஜெயந்தி ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதாகவும், வீராணம் ஏரியில் நவீன ரக மீன்வகைகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

மீன் சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும் என்றும்; தான் 55 வயதில் தான் கண்ணாடி அணிந்ததாகவும் கூறினார்.

தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு 5 லட்சம் டன் மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும்; ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்புத்  தொழில் செய்தால் பத்து மாதங்களில் 1 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம் வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், இளைஞர்கள் படித்து முடித்ததும் அரசு பணிக்கு ஆசைப்படாமல் தொழில் முனைவோராக முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே