கொரோனா வைரஸ் உணவுகள் மூலம் பரவுமா?..

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த கொரோனா வைரஸ் தான். சீனாவில் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளுக்குப் பரவி மக்களை வாட்டி வருகிறது. இதனால் அதைப் பற்றிய பொய் வதந்திகளும் வலைதளங்களில் பரவி வருகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கே விளக்கமாகக் காண்போம். நாம் உண்ணும் உணவிலும் கூட இந்த தொற்று பரவுமா ஏனெனில் கொரோனா வைரஸ் கோர தாண்டவத்தால் இந்திய மக்களிடையே பல வதந்திகள் உலாவருகிறது.

இந்த கொடிய சுவாச நோய் மக்களை அச்சுறுத்துவதை காட்டிலும் மக்களை புலம்ப வைத்துள்ளது என்றே கூறலாம். மக்களும் இவற்றைப் பற்றிய தவறான வதந்திகளை நம்பி மீன், இறைச்சி இவற்றை சாப்பிடக் கூட பயந்து வருகின்றனர். குறிப்பாக கோழி இறைச்சியை கண்டிப்பாக சாப்பிடவேண்டாம் என்பது மக்கள் மத்தியில் நிலவும் கருத்தாக இருந்துவருகிறது. அதனால் சமீப நாட்களாக கோழி இறைச்சியின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள் என்ன? உண்மையில் அவை பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து மேலும் பார்க்கலாம்.

​​​கொரோனா வைரஸ் ஆதிக்கம்

இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்கனவே சுமார் 3000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவின் கேரளாவில் 3 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளுடன் 28 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியதாக புள்ளி விவரங்கள் கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து இந்தியாவில் மேலும் 2 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் சமீபத்தில் தன் இணையத்தில் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ஒருவர் புதுதில்லியில் (இத்தாலியில் இருந்து பயணம் கண்டவர் ), மற்றொருவர் தெலுங்கானாவில் (துபாயில் இருந்து பயணம் கொண்டவர் ).

​​​கடல் உணவுகள்

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் என்ற பகுதியில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இருப்பினும் சீனாவில் உள்ள மக்கள் தினமும் சந்தைக்கு சென்று மீன், இறைச்சி, கடல் உணவுகள், மட்டன், பன்றி, பாம்பு போன்ற உணவுகளை வாங்கவும் விற்கவும் செய்யத் தான் செய்கிறார்கள். எனவே இதற்காக இந்தியாவில் உள்ள மக்கள் பயம் கொள்ள வேண்டாம். ஏனெனில் கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியாகத் தான் பரவுகிறது. எனவே நீங்கள் சாப்பிடும் கடல் உணவிற்கும் கொரோனா வைரஸூக்கும் நெறுங்கிய தொடர்பு எதுவும் இல்லை. எனவே மக்கள் வீண் வதந்திகளை நம்பி பீதி அடைய வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

​​வெளவால் காரணமா?

சமீபத்தில், ஒரு சீன நபர் ஒரு வெளவால் சூப் குடிப்பதாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டார். உடனே நம் மக்களும் வெளவால் இறைச்சி வழியாகத்தான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்று நம்பத் தொடங்கி விட்டனர். கொரோனா வைரஸ் விலங்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்று விஞ்ஞானிகள் நம்பினாலும் இன்னும் இதை தீர்க்கமாக சொல்ல முடியவில்லை. உறுதியான முடிவுகள் எதுவும் தெரியவில்லை. வெளவால், பாம்பு மற்றும் கொரோனா வைரஸ் இவற்றிற்கிடையேயான தொடர்பை இன்னமும் மருத்துவர்கள் ஆராய்ந்து தான் வருகின்றனர்.

​​​கொரோனா பீர்

நம் மக்களுக்கு எதாவது ஒன்றாக இருந்திடக் கூடாது. எனவே அதை இரண்டையும் முடிச்சு போட்டு கதைக் கட்ட தொடங்கி விடுவார்கள். கொரோனா என்ற பெயர் பீருக்கும், வைரஸூக்கும் பொதுவான பெயராக அமைந்து விட்டதால் அதிலிருந்து தான் வைரஸ் பரவுகிறது என்று இணையத்தில் பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் கொரோனா என்பதற்கு லத்தீன் மொழியில் கிரீடம் என்று பெயர். கொரோனா வைரஸின் தோற்றம் அந்த அமைப்பில் இருப்பதால் அது கொரோனா வைரஸ் என்று அழைக்கப்பட்டது. இது புரியாமல் மக்கள் பீருடன் முடிச்சு போட்டு விட்டனர். இதன் விளைவு அந்த பீர் கம்பெனி கொரோனா 15 மில்லியன் டாலரை கொரோனா வைரஸ் பெயரை பட்லைட் வைரஸ் என்று மாற்றுவதற்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

​பூண்டு கொரோனா வைரஸை அழிக்குமா?

உண்மையில் இயற்கையாகவே தொற்றுகளை எதிர்த்து போராடும் மருத்துவ குணம் பூண்டில் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆர்கனோசல்பர் கலவை மற்றும் பூண்டின் ஆண்டிமைக்ரோபியல் தன்மை புற்று நோயைக் கூட எதிர்த்து போராடும். இருப்பினும் பூண்டு கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்துமா என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் இதுவரை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

பூண்டில் ஏராளமான ஆன்டி- இன்பிளமேட்டரி பண்புகள் இருக்கின்றன. அவை உங்களுடைய உடலிக் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடும். அதனால் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அது நிச்சயம் கொரோனா வைரஸைத் தாக்கி அழிக்குமா என்பது கண்டறியப்படவில்லை.

​இறைச்சி உணவுகள்

இந்த கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவுவதால், இறைச்சி பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது. ஆனால் இன்னும் இது உண்மை என்று சான்றுகள் எதுவும் கூறவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் இந்தியாவில் மக்கள் இறைச்சி சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பான ஒன்று. மக்கள் இறைச்சி சாப்பிடும் போது செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். பச்சையாக சாப்பிடாதீர்கள். இது கொரோனா வைரஸ் மட்டுமல்ல விலங்குகள் மூலம் பரவும் மற்ற வைரஸ்களும் உங்களை தாக்காமல் இருக்க உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே மக்கள் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளை படிப்பது தவறில்லை. ஆனால் அது எல்லாம் உண்மையா என்பதை உணர்ந்து செயல்படுவது வீண் பயத்தை போக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே