மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டதாக பாஜக எம்.பி மனோஜ் திவாரி ட்வீட் செய்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த 2ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.
லேசான அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பாதிப்பு காரணமாக, கடந்த 5ம் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பூமி பூஜையிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் சிகிச்சைக்கு பிறகு மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளதாக பாஜக எம்.பி மனோஜ் திவாரி ட்வீட் செய்துள்ளார்.
அமித்ஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அவர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இந்த செய்தி பாஜக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் திடீரென அந்த டுவிட் தற்போது நீக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்றும் அதனால் கொரோனாவில் இருந்து குணம் ஆகி விட்டார் என்ற செய்தி தகவல் தவறானது என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதனை அடுத்தே பாஜக எம்பி மனோஜ் திவாரி தனது டுவிட்டை நீக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது
மத்திய அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் குணம் அடைந்தார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக மருத்துவமனையிலிருந்து அறிவிக்கப்படுவதற்கு முன்பே மனோஜ் திவாரி டுவிட்டரில் அமித்ஷா குணமாகிவிட்டதாக டுவிட்டை பதிவு செய்ததும் தற்போது அந்த டுவிட்டை அவர் நீக்கியுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.