பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க உள்ளார். தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம், முதலமைச்சர் எடுத்துரைக்க உள்ளார்.
பொது போக்குவரத்து, பள்ளிகள் திறப்பு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற 31ம் தேதி நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடய தளர்வுகளுடன் பொது முடக்கத்தை தமிழக அரசும் நீட்டித்துள்ளது. இருப்பினும், நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனை தரும் வகையில் உள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,994 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 5,974 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள்.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 2,96,901 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
அதில் தமிழகத்தில் மட்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை பிரதமர் மோடியுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.