தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக வளரும் – ஜே.பி. நட்டா

தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக வளரும் என்பதை தொண்டர்களின் பிரம்மாண்ட வரவேற்பின் மூலம் உணர்வதாக, அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

திருவள்ளூரில் நடைபெற்ற விழாவில் கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பாஜக அலுவலகம் கட்டும் பணியை ஜே.பி.நட்டா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தமிழகத்தில் சக்தி மிக்க கட்சியாக பாஜகவை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் மூலமாக வந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

தமிழக கலாசாரம் மிகவும் தொன்மையானது என்றும் அது இல்லாமல் இந்திய கலாச்சாரம் முழுமை பெறாது என்றும் நட்டா தெரிவித்தார்.

தமிழகம் வந்த பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை சாரட் வண்டியில் அழைத்து வந்து பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே