லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சம்பவத்தின்போது இந்தியா-சீனா நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் சீனா ராணுவம் பின்வாங்கியுள்ளது.
ஆனால் எல்லா இடங்களிலும் பின் வாங்க தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், எல்லையில் ஊடுருவலை துல்லியமாக கண்காணிக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (DRDO) அதிநவீன ட்ரோன் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு வழங்கியுள்ளது.
பாரத் என பெயரிடப்பட்டுள்ள இந்த ட்ரோன் மூலம் சீன எல்லையை துல்லியமாக கண்காணிக்கப்படும்.
எந்த ஒரு இடத்திலும் துல்லியமான கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில் இந்த பாரத் ட்ரோன்களை வடிவமைத்துள்ளனர்.
இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எதிரிகளை கண்டறியும் வகையில் பிரத்யேக அம்சத்தை கொண்டுள்ளது.
இதன் மூலம் இந்திய ராணுவத்தினர் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என DRDO வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான வானிலையையும் எதிர்கொண்டு கண்காணிக்கும் திறன் கொண்டது பாரத் ட்ரோன்.
இதன் மூலம் இரவு நேரங்களில் காடுகளில் மறைந்திருக்கும் மனிதர்களைக் கூட கண்டுபிடிக்க முடியும் எனவும் கூறுகின்றனர்.