ஏழைகளை பலி வாங்கும் சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் சிற்றேரிக்கரையை சேர்ந்த தொழிலாளி ஒருவர் 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை வாங்கி கடனாளி ஆனதால், 3 குழந்தைகளை கொன்று விட்டு, மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இந்த தற்கொலைகளை பார்த்தால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சமூகத்தில் எந்த அளவுக்கு சீரழிவை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடிவதாக அவர் கூறியுள்ளார்.
2003-ம் ஆண்டு லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்ட போது அதை நம்பியிருந்த லட்சக்கணக்கான விற்பனையாளர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்கள் செய்து தரப்படவில்லை என்று அறிக்கையில் சுட்டிகாட்டினார்.
இதனால் அவர்களில் பலர் வேறுவழியின்றி சட்டவிரோத 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.