பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தனக்கு தூக்கு தண்டனை விதித்தால் கூட தூக்கில் தொங்குவேனே தவிர ஒருபோதும் ஜாமீன் கேட்க மாட்டேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார்.
1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உமாபாரதி மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் உமாபாரதி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.
உமாபாரதிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு அண்மையில் உமாபாரதி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதில், அயோத்தி ராமஜன்ம பூமி இயக்கத்தில் பங்கேற்றதற்காக பெருமைப்படுகிறேன்.
இந்த இயக்கத்தில் பங்கேற்றதற்காக எனக்கு தூக்கு தண்டனை கிடைத்தால் கூட அதை பெருமையாக ஏற்றுக் கொள்வேன்.
அதேநேரத்தில் தூக்கு மேடையில் தொங்கவும் தயாராக இருக்கிறேனே தவிர ஒருபோதும் ஜாமீன் கேட்கமாட்டேன்.
அப்படி நான் ஜாமீன் கேட்பது என்பது அயோத்தி ராமஜன்ம பூமி இயக்கத்தில் பங்கேற்ற என்னுடைய ஈடுபாட்டை கேள்விக்குறியாக்கிவிடும் என குறிப்பிட்டிருக்கிறார் உமாபாரதி.