“அகமதாபாத் பிட்சில் இப்படித்தான் ஆட வேண்டும்”-பேட்ஸ்மேன்களுக்கு அசாருதீன் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தின் ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டுமென பேட்ஸ்மேன்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்த மைதானத்தில்தான் நடைபெற்றது. இந்த போட்டி இரண்டு நாட்களில் முடிவடைந்த நிலையில் இதற்கு காரணம் ஆடுகளம்தான் என வரிந்து கட்டிக்கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் ஆதரவாளர்கள் விமர்சித்திருந்தனர். அதே நேரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாகவும் விமர்சனங்கள் வந்திருந்தன

இந்நிலையில் இது குறித்து பொதுவான கருத்தை ட்விட்டரில் முன்வைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன்.

“அகமதாபாத் டெஸ்டில் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தடுமாறியது ஏமாற்றமாக இருந்தது. இந்த மாதிரியான ட்ரையான (Dry) ஆடுகளத்தில் விளையாடும்போது ஷாட் செலெக்ஷன் மற்றும் ஃபுட்வொர்க் ரொம்ப முக்கியம். அதேபோல ஸ்பைக் வைத்த ஷூவுக்கு மாற்றாக ரப்பர் சோல் வைத்த ஷூக்களை அணைந்து விளையாட வேண்டும். 

இதுமாதிரியான சவாலான ஆடுகளங்களில் அற்புதமான பேட்டிங் இன்னிங்ஸை விளையாடிய வீரர்கள் எல்லாம் ரப்பர் சோல் அணிந்திருந்தது அதற்கு முன் உதாரணம். ரன்களை எடுக்க ஓடும்போது சறுக்கும் என்ற வாதம் எழலாம். டென்னிஸ் வீரர்கள் ரப்பர் சோல்  அணிந்து தான் அற்புதமாக விளையாடுகிறார்கள். 

இந்தியர்கள் மட்டுமல்லாது இந்தியாவுக்கு வந்து விளையாடிய பல கிரிக்கெட் லெஜெண்ட்களும் இதை செய்துள்ளனர்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அவர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே