திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தில் வசிக்கும் ஸ்டீபன் சௌபாக்கியா தம்பதியின் 9 வயது மகளான சிறுமி டான்யா Parry Romberg Syndrome Hemifacial atrophy எனப்படும் அறிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த மாதம் 16ஆம் தேதி இது குறித்து செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தையின் உடனடி சிகிச்சைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், அக்குழந்தையின் வீடு தேடி சென்று பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளான மருத்துவ காப்பீடு அட்டை குடும்ப நல அட்டை உள்ளிட்ட உதவிகளை செய்தார்.

பின்னர் 17-ம் தேதி மாலை தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் முக அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 6 நாட்கள் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட குழந்தை டான்யாவிற்கு 6-வது நாள், கடந்த மாதம் 23-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 9 மணி நேரம் உயர்தர தொழில்நுட்ப முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 10 மருத்துவர் குழு மற்றும் 31 மருத்துவக் குழுவினரால் அதி நவீன மைக்ரோ சர்ஜரி செய்யப்பட்டது.

அதற்குப் பின் 5 நாட்கள் ISOLATED ICU ல் குழந்தை டான்யா தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். 6வது நாள் ISOLATED ICU -வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். ஆகஸ்ட் 29- ஆம் தேதி இரவு 9 மணியளவில் குழந்தை டானியாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து நலம் விசாரித்தார். அதற்குப் பிறகு சுமார் 15 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த டான்யா இன்று காலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அவரை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே