தலோஜா மத்திய சிறைக்கு அர்னாப் கோஸ்வாமி திடீர் மாற்றம்..!!

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியை தலோஜா சிறையில் போலீஸார் அடைத்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு அன்வய் நாயக் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ரிபப்ளிக் டிவி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட நிலையில் சிவசேனா ஆட்சியில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் காங்கிரஸ்- கோஸ்வாமி மோதல் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் அதிரடியாக கைது செய்தது தெரியவந்தது.

அவரது வீட்டுக்குள் சென்று அவரை தரதரவென இழுத்து வந்து வேனில் ஏற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் அவரது குடும்பத்தாரையும் தாக்கியதாகவே சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் அலிபாக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து நீதித் துறை தலைமை மாஜிஸ்திரேட் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

பல மணி நேர விசாரணைக்கு பிறகு போலீஸ் காவலில் அனுப்ப நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அலிபாக்கில் உள்ள அரசுப் பள்ளியின் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை திடீரென போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு தலோஜா மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் தனிமைப்படுத்தும் மையத்தில் செல்போன் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவர் வேனில் அழைத்துச் செல்லும் போது வேனைச் சுற்றி கருப்பு நிற திரையால் மூடப்பட்டிருந்தது. இந்த சிறை மாற்றம் குறித்து அர்னாப்பின் வழக்கறிஞர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இவர் கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரும் திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே