தொகுப்பாளினியின் இந்தி பேச்சால் மேடையை விட்டு இறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

தொகுப்பாளினியின் இந்தி பேச்சைக் கேட்டு விட்டு, உடனடியாக மேடையை விட்டு வெளியேறிய ஏ.ஆர்.ரஹ்மானின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

தொகுப்பாளினியின் இந்தி பேச்சைக் கேட்டு விட்டு, உடனடியாக மேடையை விட்டு வெளியேறிய ஏ.ஆர்.ரஹ்மானின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்துள்ள, ’99 சாங்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள், பாடர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர்.

திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலும், தனிப்பட்ட இசை ஆல்பம் வெளியிடுவதிலும் கவனம் செலுத்தி வந்த ரஹ்மான் முதன் முறையாக திரைப்பட தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறார். அதோடு ’99 சாங்ஸ்’ படத்தின் கதையையும் அவரே எழுதியிருக்கிறார். இதுவரை மற்ற தயாரிப்பாளர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த ரஹ்மான், முதன் முறையாக தனது தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘99 சாங்ஸ்’ படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தமிழ் பதிப்பின் வசனங்களை இயக்குநர் கெளதம் மேனன் எழுதியுள்ளார்.

இந்நிலையில் ‘99 சாங்ஸ்’ இசை வெளியீட்டின்போது இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி தமிழில் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென இந்தியில் பேசினார். உடனே இந்தி? எனக் கேட்டவாறு மேடையை விட்டு கீழிறங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான். ’முதல்லயே கேட்டேன், தமிழ் பேசுவீங்களான்னு’ என்றும் தொகுப்பாளினியை நோக்கி கேள்வி எழுப்பினார். ‘சார் நான் தமிழ் தான் பேசுவேன். சும்மா வெல்கம் பண்ணலாம்ன்னு’ என்று பதிலளித்தார் பதறிப்போன அந்த தொகுப்பாளினி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே