மோகன்லாலுடன் திரையில் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்: ரசிகர்கள் உற்சாகம்

மோகன்லால் நடிப்பில் உருவாகும் ‘ஆராட்டு’ திரைப்படத்தில் ஒரு பாடலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தோன்றவுள்ளார்.

பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், சித்திக், நெடுமுடி வேணு உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் ‘ஆராட்டு’. ராகுல் ராஜ் இசையமைக்கும் இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவை திரைப்படமாக இது உருவாகிறது.

இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இதற்கு முன்னர் ‘மடம்பி’, ‘கிராண்ட் மாஸ்டர்’, ‘மிஸ்டர் ஃப்ராடு’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஒரு பாடலில் மோகன்லாலுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தோன்றவுள்ளார்.

இந்தப் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மோகன்லால், “இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு அரிய, அற்புதமான படப்பிடிப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் ரஹ்மானின் ‘முக்காலா முக்காபுலா’ பாடலை, உரிய விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்த இருப்பதாகவும், அந்தப் பாடலில்தான் ரஹ்மானும், மோகன்லாலும் இணைந்து தோன்றுகின்றனர் என்றும் மல்லுவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் மலையாளத் திரைப்படங்களில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவர். தமிழில் ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான் அதே வருடம் மலையாளத்தில் ‘யோதா’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தின் நாயகன் மோகன்லால். இதன் பிறகு ரஹ்மான் நேரடியாக மலையாளத்தில் இசையமைக்கவில்லை.

தற்போது ப்ரித்விராஜ் நடிப்பில் ‘ஆடுஜீவிதம்’ திரைப்படத்துக்கு இசையமைப்பதன் மூலம் மீண்டும் மலையாளத் திரையுலகில் கால் பதிக்கிறார் ரஹ்மான். ’ஆராட்டு’ மூலம், தான் அறிமுகமான திரைப்படத்தின் நாயகனான மோகன்லாலுடன் இவ்வளவு வருடங்கள் கழித்து ரஹ்மான் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாக இதுகுறித்துப் பகிர்ந்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே