கொரானா காரணமாக 3 மாதங்களுக்கு புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்க ஒப்புதல்

கொரோனா காரணமாக புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மூன்று மாதங்களுக்கு அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என முதலமைச்சர் நாரயணசாமி வலியுறுத்தியிருந்த நிலையில், இலவச அரிசுக்கு பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும்படி அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ஏற்று, புதுவையில் அரிசிக்கு பதில் பணம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.

மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயேன், அரிசிக்கு பதில் பணம் வழங்கலாமா என்பது குறித்த பிரச்னையில், குடியரசு தலைவர் அறிவுறுத்தல்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அதற்கு புதுச்சேரி அரசு கட்டுப்பட வேண்டும் எனக் கூறி, துணைநிலை ஆளுநரின் உத்தரவை உறுதி செய்து, முதல்வர் நாராயணசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், யூனியன் பிரதேச அரசின் முடிவுகளுக்கு முரணான கருத்துக்களை தெரிவிக்கவும், குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கவும் துணை நிலை ஆளுனருக்கு அதிகாரம் உள்ளது.

ஆனால், சட்டப்பூர்வ காரணங்கள் இல்லாமல், அரசு திட்டத்துக்கு எதிரான கருத்தை தெரிவிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துணை நிலை ஆளுனரின் முடிவுகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளுக்கு பதில், மாற்று திட்டத்தை அறிவிக்க துணைநிலை ஆளுனருக்கு அதிகாரமில்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரிசிக்கு பதில் பணம் கொடுக்கும் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டத்துக்கு விரோதமானது எனவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத துணைநிலை ஆளுனர் தலையிடுவது ஜனநாயக கொள்கைகளுக்கு விரோதமானது என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்தனர். அந்த வாக்குறுதியை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் தலையிட மத்திய அரசுக்கும், துணைநிலை ஆளுனருக்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏதேனும் திட்டம் தொடர்பாக அரசுக்கும், ஆளுனருக்கும் கருத்து வேறுபாடு இருந்தால் குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும், அனைத்து ஆதாரங்களையும் முறையாக பரிசீலித்து மத்திய அரசு விரிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஏற்கனவே ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என முதல்வர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசுத்தரப்பில், தற்போது கொரோனா பரவல் காரணமாக மூன்று மாதங்களுக்கு அரிசியே வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே