கரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் பிரகாஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:
கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களை இனி அரசின் முகாம்களிலே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக முகாம்களில் கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
அதாவது, கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் முகாம்களில் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர்.
குடும்பத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
அறிகுறி இல்லாதவர்களும் 10 அல்லது 15 நாள்கள் முகாமில் தங்க வைத்து சிகிச்சை பெற்று வீடு திரும்புவர் என்று தெரிவித்தார்.
அதேபோன்று, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து, பணிக்கு திரும்புபவர்களை பணியமர்த்த மறுப்பதும், உடல் தகுதி சான்றிதழ் கேட்பதும் சட்டப்படி தவறு.
முறையாக புகார் வந்தால், நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.