சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக, மூத்த ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரொனாவை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், சென்னையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க, சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
அவரது தலைமையிலான குழு, கட்டுப்பாட்டு பகுதிகளை மேலாண்மை செய்வது, தொற்றுள்ள நபர்களை கண்காணிப்பது, தொற்றை கட்டுப்படுத்துவது ,பரிசோதனையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்த சிறப்புக்குழுவை கண்காணிக்க மண்டல வாரியாக 5 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.
இதற்காக அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக, மூத்த ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நில நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் பங்கஜ்குமார், சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளை ஒருங்கிணைப்பார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.