ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது என்பது குறித்து மதியத்திற்கு மேல் அறிக்கை அளிக்கப்படும் என ஐதராபாத் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக கடந்த 3 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல்நிலை சீராக உள்ள நிலையில் யாரும் பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனைத்து பரிசோதனை முடிவுகளும் வந்துவிட்டதாகவும், அதில் பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என கூறியுள்ளது. மேலும் ரஜினிகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு என அவரது சகோதரர் சத்யநாராயணா கூறியிருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அப்போலோ மருத்துவமனை ஒரு அறிக்கை அனுப்பியிருந்தது. அதில் அவர் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அவர் உடல்நிலை குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் கூறியிருந்தது.
ஐதராபாத்தில் அண்ணாத்த படப் பிடிப்பின் போது அங்கு அவருடன் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த பரிசோதனையில் நடிகர் ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
எனவே ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இந்நிலையில் அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் அறிக்கை அளிக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.