சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், இந்திய அளவில் 5-வது தலைசிறந்த உயர் கல்வி நிறுவனம் என்று Education World அமைப்பு வெளியிட்டுள்ள 2020-2021-ம் ஆண்டுக்கான உயர்கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Educational World என்ற அமைப்பு நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் குறித்த தர வரிசைப் பட்டியலை வெளியிட்டது.
அதில் தமிழகத்திலேயே தலைசிறந்த உயர் கல்வி நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டது.
மேலும் தேசிய அளவில் முதலிடத்தில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) உள்ளதாகவும் Education World அமைப்பு தெரிவித்துள்ளது.
2-ம் இடத்தை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகமும், 3-வது இடத்தை டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகமும், 4-ம் இடத்தை டெல்லி பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன.
இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 5 வது இடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் உள்ள 162 உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2,214 பேராசிரியர்கள், 1,126 மாணவர்களிடமும், 828 தொழில் பிரதிநிதிகளிடமும் நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறந்த உயர்கல்வி, கற்றல் – கற்பித்தல், பாடத்திட்டம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் ஆகிய 10 அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.