திமுக சார்பில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: காவல்துறை நோட்டீஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் நாள்தோறும் ஒன்று, இரண்டு பேர் என இருந்த பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

நேற்று வரையில் 1173 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய , மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15 ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் நாளை கூட்டணி கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த திமுகவுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கட்சி தலைவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து கூட்டத்தை நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.

காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை நடத்தலாம் என தேனாம்பேட்டை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே