ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் – இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில்
சென்னையில் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவதுப் போட்டியில் இந்தியாவும் வென்றது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று 3 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லேவை டக் அவுட் ஆக்கினார் இஷாந்த் சர்மா. இதனையடுத்து தன்னுடைய 100 ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார் இஷாந்த் சர்மா. அடுத்து வந்த ஜானி பேரிஸ்டோவை ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற்றினார் அக்ஸர் படேல்.

இந்திய அணிக்கு மேலும் உத்வேகம் தரும் விதமாக கேப்டன் ஜோ ரூட் 17 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் சுழலில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்தின் முக்கிய விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியதால் கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆர்ப்பரித்தார். இதனையடுத்தும் இங்கிலாந்தின் கிராவ்லி அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.

இதற்கு அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் சொந்த மண்ணில் அசத்தலாக பந்துவீசிய அக்ஸர் படேல் 6 விக்கெட்டையும், அஸ்வின் 3 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இந்திய சுழற்பந்தை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே