திருவள்ளூர் அருகே பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த சேலை கிராமத்தைச் சேர்ந்த கவியரசு என்ற கல்லூரி மாணவரின் பிறந்த நாளை சிலர் பட்டா கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன.
மேலும் அந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை டிக்டாக்கிலும் பதிவேற்றம் செய்திருந்தனர். இவை சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில் பட்டா கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடியதாக கல்லூரி மாணவர்கள் மணிகண்டன், விக்னேஷ், சதீஷ்குமார் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் ரூட் தல ஒருவரின் திருமண விழாவில், மாணவர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்கள் மேடையில் ஏறி பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.