பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி புகார்

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்து திருமணத்தை நிறுத்தி விட்டதாக பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன்.

நிகழ்ச்சியின் கடைசி வரை வந்த தர்ஷன் வெற்றியாளராவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த வாய்ப்பு முகெனுக்கு கிடைத்தது.

இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் தர்ஷனுக்கு வாய்ப்பு வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

தர்ஷன் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக இருந்த போது ஷெரினுடன் நல்ல நட்பு பாராட்டி வந்தார். இவர்களது நட்பை போட்டியாளர்கள் சிலர் காதல் என்று பேசினர்.

ஆனால் தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார்.

மாடலிங் துறையில் அவருக்கு உதவியாக இருந்த ஷனம் ஷெட்டிதான் தர்ஷனின் காதலி என்று தகவல்கள் வெளியாகின.

ஷனம் ஷெட்டியும் அதை பல்வேறு பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சமயத்தில் தர்ஷன் குறித்து வீடியோ வெளியிட்ட ஷனம் ஷெட்டி, “என்னால் தர்ஷனின் பிக்பாஸ் வெற்றி பறிபோவதாக பேசுகின்றனர். அதனால் இனி நான் தர்ஷனைப் பற்றி பேசப்போவதில்லை. என் வாழ்வில் அவர் இல்லை” என்று கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேரடியாக புகார் அளித்துள்ளார் ஷனம் ஷெட்டி.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஷனம் ஷெட்டி, கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்து ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நேரத்தில் சினிமா நடிகர்களையும் தன்னையும் இணைத்து தவறாகக் கூறி திருமணத்தை நிறுத்தினார் தர்ஷன்.

இதனால் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. எனது குடும்பமே மன உளைச்சலுக்குள்ளானது.

திருமணத்தை ஏன் நிறுத்தினாய் என்று தர்ஷனிடம் கேட்டதற்கு என்னுடைய வழியில் குறுக்கே வரக்கூடாது.

அப்படி வந்தால் என்னுடைய ரசிகர்கள் சமூகவலைதளத்தில் உன்னை தவறாக சித்தரிப்பார்கள் என்று என்னை மிரட்டினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவரை அனுப்ப விண்ணப்பம் அனுப்பியது முதல் அவர் புகழ்பெற்றது வரை எனக்கு பங்கு உண்டு.

அவர் தேவைக்காக ரூ.15 லட்சம் வரை செலவு செய்திருக்கிறேன்.

நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்திவிட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே