திருமண மோசடி கும்பலிடம் சிக்கிய நடிகை பூர்ணா..! குடும்பத்துடன் போலீசில் தஞ்சம்

பிரபல நடிகை பூர்ணாவிடம், துபாய் நகைகடை அதிபர் என ஏமாற்றி திருமண மோசடி செய்ய முயன்ற 4 பேர் கும்பல் மேலும் 3 மாடலிங் பெண்களை கடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. டிக்டாக்கில் பழகியவரை நம்பியதால் நடிகை பூர்ணா குடும்பத்துடன் போலீசில் தஞ்சம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டருக்கிறார்.

தகராறு, முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கொடிவீரன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்துள்ளார் நடிகை பூர்ணா என்கிற ஷம்னா காசிம்.

தற்போது போதிய பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஒரு பாடலுக்கு சினிமாவில் நடனம் ஆடிவரும் பூர்ணா, ஷம்னா காசிம் என்ற பெயரில் டிக்டாக்கில் கணக்கு தொடங்கி அதில் தனது திறமையை காட்டிவந்தார்…

இந்த நிலையில் கேரள மாநிலம் மாராடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் பூர்ணாவை, திருமண மோசடி கும்பல் ஒன்று பணம் கேட்டு பிளாக்மெயில் செய்வதாக அவரது தாய் ரவுலா, மாராடு போலீசில் புகார் அளித்தார்.

அதில், அன்வர் என்ற பெயரில் டிக்டாக் மூலம் தன் மகளிடம் அறிமுகமான நபர் தான் கோழிக்கோட்டிலும், துபாயிலும் பெரிய நகைக்கடை வைத்திருப்பதாகவும், தற்போது துபாயில் வசிப்பதாகவும் கூறி பழகியுள்ளான்.

இருவரும் செல்போனில் பேசிவந்த நிலையில் பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள அந்த நகைக்கடை அதிபர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதனை உண்மை என்று நம்பி பூர்ணாவும், தனது வீட்டிற்கு குடும்பத்தினருடன் வந்து பெண் கேட்க கூறியுள்ளார். அதன் படி கடந்த 3ஆம் தேதி அன்வரின் குடும்பம் என 6 பேர் கும்பல் ஒன்று பெண் கேட்டு வந்துள்ளது.

டிக்டாக்கில் பழகிய அன்வர் மட்டும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பூர்ணா அந்த கும்பலை சேர்ந்தவர்களிடம் நைசாக பேசி இன்னொரு நாளில் திருமணம் குறித்து பேசலாம் என்று அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்த கார், வீட்டின் வெளிப்புற பகுதி, போன்றவற்றை செல்போன் மூலம் படம் பிடித்ததை சிசிடிவி காட்சிகளின் மூலம் கண்டறிந்த பூர்ணா, அன்வர் என்ற டிக்டாக் பிரபலம் பெயரில் பேசியவர் போலி என்பதை கண்டுபிடித்தார்.

அந்த நபர் ரபீக் என்பது தெரியவந்த நிலையில் சினிமா வாழ்க்கையை கெடுக்காமல் இருக்க வேண்டுமானால் தங்களுக்கு 1 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று மிரட்டியதாக அந்த புகாரில் பூர்ணாவின் தாய் கூறியிருந்தார்.

இதையடுத்து அந்த திருமண மோசடிக் கும்பலை சேர்ந்த ரபீக், ரமேஷ் கிருஷ்ணன், சிவதாசன், அஷ்ரப் சையது முகம்மது ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்று நடிகையிடம் கதைவிட்ட இந்த கும்பல் திருச்சூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இந்த மோசடிக் கும்பல், டிக்டாக் மூலம் பூர்ணாவை காதல்வலையில் வீழ்த்தி திருமண மோசடியில் ஈடுபட திட்டமிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த மோசடி கும்பலுடன் தொடர்புடையவர்கள், தொடர்ந்து மிரட்டுவதால் தனக்கு பாதுகாப்பு கேட்டு குடும்பத்துடன் காவல் காவல் உயர் அதிகாரியை சந்தித்து நேரில் புகார் அளித்ததாக பூர்ணா விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், மாடல் பெண்கள் 3 பேரிடம் டிக்டாக் மூலம் பழகி நடிக்க வாய்ப்பு தருவதாக ஏமாற்றி அழைத்து சென்று லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும், அதில் ஒரு பெண்ணை வீடியோ எடுத்து வைத்து தங்க கடத்தலுக்கு பயன்படுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மற்றொரு பெண்ணிடம் 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் அவர் அணிந்திருந்த இரண்டரை சவரன் நகையை பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை கண்டு உஷாரானதால் நடிகை பூர்ணா தப்பியதாக கூறப்படுகின்றது.

சீனாவின் நாசகார செயலியான டிக்டாக் உள்ளூர் ஆட்டக்காரர்கள் முதல் உலக ஆட்டக்காரர்கள் வரை அனைவரையும் இடியாப்ப சிக்கலில் மாட்டிவிட்டு முட்டுச்சந்தில் நிறுத்திவருகிறது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே