மாஸ்டர் பட தயாரிப்பாளரின் சீரியலில் நடிகை தேவயானி ரீ என்ட்ரி

நடிகை தேவயானி நடிக்கும் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1995-ம் ஆண்டு வெளியான ‘தொட்டா சிணுங்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தேவயானி. 1996-ம் ஆண்டு அஜித் – தேவயானி நடிப்பில் வெளியான ‘காதல் கோட்டை’ தேசிய விருதைப் பெற்றது. அத்திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தமிழக அரசு தேவயானிக்கு விருது கொடுத்து கவுரவித்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து வரும் தேவயானி 2003-ம் ஆண்டு முதல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘ராசாத்தி’ சீரியலில் நடித்திருந்த தேவயானி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்ற தொடரில் நடிக்கிறார். மார்ச் 22-ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் இத்தொடரின் ப்ரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் தேவயானி, “ஜீ தமிழ் குடும்பத்தில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நடிக்கிறேன். எனது கேரக்டர் முதல் அனைவரது கதாபாத்திரங்களும் மிகவும் நன்றாக இருக்கும். கதை மிகவும் அழகானது. எல்லோருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். என்னுடைய கேரக்டரைப் பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது.

என்னுடைய ரசிகைகளுக்கும் அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும்படி என்னுடைய கதாபாத்திரம் இருக்கும். 15 வருடங்களுக்குப் பின் சீரியல் நடிகர் அபிஷேக் உடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இத்தொடரில் அதிகம் எதிர்மறையான விஷயங்கள் இருக்காது. பாசிட்டிவ்வாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே