சூர்யா, ஜோதிகாவிற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி

ஜோதிகா பேசியதில் எந்தவொரு தவறும் இல்லை என நடிகர் சூர்யா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்ற விருது விழா ஒன்றில், தஞ்சை பெரிய கோயில் அருகே ஷூட்டிங் நடத்தியதாகவும், கோயிலை பராமரிக்கும் அளவுக்கு அங்குள்ள மருத்துவமனைகளையும், பள்ளிகளையும் பராமரிக்கவும் செலவு செய்ய வேண்டும் என நடிகை ஜோதிகா பேசியிருந்தார்.

இந்துக் கோயிலை அவமதிக்கும் விதமாக ஜோதிகா பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பின.

தஞ்சை பெரிய கோயில் குறித்து நடிகை ஜோதிகா பேசியது தவறான ஒன்று எனவும், ஜோதிகாவின் பேச்சு கண்டிக்கத்தக்கது என எஸ்.வி. சேகர், காயத்ரி ஜெயராம் மற்றும் திரெளபதி பட இயக்குநர் ஜி. மோகன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தஞ்சை பெருவுடையாரை தொட்டால் கெடுவார் எனவும் ஜோதிகாவுக்கு எதிரான கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன.

இந்நிலையில், அன்பை விதைப்போம் எனும் கடிதத்தை நேற்று மாலை நடிகர் சூர்யா வெளியிட்டு இருந்தார்.

அதில், சான்றோர்கள் பலர் கூறிய விஷயத்தையே தனது மனைவி ஜோதிகா கூறியதாகவும், அதில் ஒரு தவறும் இல்லையென்றும், கோயில்களுக்கு நிகராக மருத்துவமனைகளும், பாடசாலைகளும் மாற வேண்டும் என்பதே நோக்கம் என தெரிவித்திருந்தார்.

நடிகர் சூர்யா, ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவித்து நீண்ட விளக்கத்துடன் தெளிவாக வெளியிட்ட அந்த கடிதத்தை படித்துப் பார்த்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, தனது பக்கத்தில் ‘சிறப்பு’ என பதிவிட்டு தனது ஆதரவையும் பதிவு செய்துள்ளார்.

விஜய்சேதுபதியின் கமெண்ட்டுக்கு கீழே அவரை பாராட்டியும், திட்டியும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

முன்னதாக நடிகை ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, நடிகர் விஜய்சேதுபதி பதிவிட்டதாக ஒரு சமூக வலைதளங்களில் வைரலானது.

அதனை அறிந்த நடிகர் விஜய்சேதுபதி, அது ஃபேக் என்றும்; தான் அவ்வாறு எந்தவொரு பதிவும் இடவில்லை என தெளிவு படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே