BREAKING | நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் மீண்டும் விசாரணை

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

3 வாகனங்களில் வந்த 8-க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய் சமீபத்தில் பிகில் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் வெற்றி பெற்று இந்திய அளவில் வசூல் வேட்டையில் முதல் 10 இடங்களை பிடித்தது.

இந்தநிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கில் நடிகர் விஜய்க்கு கொடுத்த ஊதியம் குறித்து கணக்கு காட்டப்பட்டுள்ளது.

அந்த கணக்கும் நடிகர் விஜய் வருமான வரித்துறையிடம் கொடுத்த கணக்கும் முரண்பாடாக இருந்தாக கூறப்படுகிறது. 

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த பிப்ரவரி 5ம் அதிரடியாக நடிகர் விஜய்க்கு சொந்தமான பனையூர், சாலிகிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் பிகில் திரைப்படம் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் குழும், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி நடிகர் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே