நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை; அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பா.ஜ., தலைவர் நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.
பீஹாரை சேர்ந்த பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், ஜூன், 14ம் தேதி, மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, சுஷாந்தின் காதலி எனக் கூறப்படும் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது, சுஷாந்தின் தந்தை புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, இந்த வழக்கை பீஹார் போலீஸ் விசாரிக்கத் துவங்கியது.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மஹாராஷ்டிர மூத்த பா.ஜ., தலைவர் நாராயண் ரானே கூறியதாவது: நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை; அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுஷாந்தின் முன்னாள் மேனேஜர் திஷாவும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மஹா., அரசு இந்த வழக்கில் கவனம் செலுத்தவில்லை. யாரையோ காப்பாற்ற நினைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.