மீண்டும் மேடையில் அழுத நடிகர் சூர்யா…

சென்னை சோழிங்கநல்லூரில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா, உணர்ச்சிவசப்பட்டு மீண்டும் கண்கலங்கினார். 

சென்னை சோழிங்கநல்லூர் சத்யபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா, அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமார், அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அகரம் நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையின் மூலம் பயின்று வரும் மாணவர்கள் 3 ஆயிரம் பேரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

முதலாவதாக பேசிய நடிகர் சிவக்குமார், எத்தனை படங்கள் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அகரம் தான் சூர்யாவின் அடையாளம் என்றும்; உழவன் பவுண்டேசன் தான் கார்த்தியின் அடையாளம் என்றும் கூறினார்.

சிவக்குமாரைத் தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, தன்னை யாருடனாவது ஒப்பிடும் தவறான பழக்கம் தனக்கு இருந்தது என்றார். அப்படி இருக்கக் கூடாது என்றும்; நாம் யாரை விடவும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ இல்லை, ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்றும் கூறினார்.

இறுதியாக மேடையேறிய நடிகர் சூர்யா, கலகலப்புடன் சிரித்துக்கொண்டே பேச்சைத் தொடங்கினார்.

பின்னர் அறக்கட்டளை நிர்வாகிகளின் பங்களிப்புகள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய சூர்யா, அறக்கட்டளையின் பொறுப்பாளரான ஜெயஸ்ரீ என்பவரை பாராட்டி பேசும்போது அவரது மகனை கட்டியணைத்து கண்கலங்கினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே