ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க கடந்த 2 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகே பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளின் போது ஆபாச இணையதளங்கள் குறுக்கீடால் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது.
மேலும் ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளின் அறிவை மங்க செய்துவிடும் என பல குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது.
அதேநேரத்தில் பல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பிற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை விதிமுறைகளை மீறி பள்ளி கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
2019 – 20 ஆம் ஆண்டிற்கான நிலுவைக் கட்டணம், 2020- 21ஆம் கல்வி ஆண்டுக்கான கட்டணங்களை செலுத்ததுமாறு பெற்றோர்களை தனியார் பள்ளிகள் வற்புறுத்தக் கூடாது.
கல்விக் கட்டணம் மட்டும் அல்லாமல், இணையவழியில் கல்வி கற்பிப்பதற்கு என்று கூறி ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் எச்சரித்துள்ளார்.
முன்னதாக தமிழக பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் பெற்றோர்கள் அளித்த புகார்களை அடுத்து கர்நாடகா அரசு 5ம் வகுப்பு வரை நேரலை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.