தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 120 தொகுதிகளில் கண்டிப்பாக ஜெயிக்கும் என பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் மறைந்த அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் அக்கட்சியில் இணைந்தார்.

இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவராக பொன்ராஜ் நியமனம் செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதன்பின் பேசிய கமல், நல்லவர்கள் வர வேண்டும் என அழைத்தேன், நாட்டுக்காக உழைத்தவர்களும் வந்துள்ளனர்.

கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும் என கூறி, பெண்கள் வாழ்க்கை தரம் மேம்பட பல்வேறு திட்டங்கள் உள்ளன என்றும் இலவச ஆரோக்கியம், கருத்தரிப்பு பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு இளைஞர் 5க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கினால், அவருக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் எனவும் கமல் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய பொன்ராஜ், அப்துல்கலாம் பெயரில் தொடங்கிய கட்சியை பதிவு செய்ய விடாமல் இன்று வரை தடுத்தது பாஜக அரசு தான்.

தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியும், மத்திய அரசு தடுத்ததாக குற்றசாட்டியுள்ளார். கமல்ஹாசனின் அழைப்பை ஏற்று மக்கள் நீதி மய்யத்தில் இணைத்துள்ளேன்.

5.75 லட்சம் கோடி கடனை வைத்துள்ள தமிழகத்தின் நிலையை மாற்றுவோம். கலாமின் அறிவார்ந்த அரசியல் காலத்தின் கட்டாயம். அவர் கனவை நினைவாக்க தொடர்ந்து உழைப்பேன்.

வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கண்டிப்பாக 120 தொகுதிகளில் ஜெயிக்கும். மாற்றம் இப்போது வராவிடில் எப்போதும் வராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே