அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழு

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்தவர் முறையாக கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என புகார் எழுந்தது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஒரு பிரிவினருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விழா குழுவை மாற்றி அமைக்க வலியுறுத்தியும், அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து நடத்தவும் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் குழு அமைத்து நடத்த உத்தரவிட்டனர்.

இதேபோன்று, அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டுகளையும் மாவட்ட ஆட்சியர், தென்மண்டல காவல்துறை தலைவர், ஊராட்சி மன்ற உதவி இயக்குநர் கண்காணிப்பின் கீழ், நடத்துவதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே