அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நடைபெறவுள்ள நிலையில் இதனை சுட்டிக்காட்டி வரலாற்று தினம் என பாஜக மூத்த தலைவர் அத்வானி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் ஜூன் மாதத்திலிருந்து தொடங்கி நடந்து வருகின்றன.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நாளை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டவிருக்கிறார்.
கரோனா தொற்று சூழல் காரணமாக நிகழ்ச்சியில் குறைவான நபர்களே பங்கேற்க உள்ளனர். இருப்பினும் விழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் பூமி பூஜை விழா மேடையில் 4 மொத்தம் இடம் பெறுவர்.
பிரதமர் நரேந்தி மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இடம் பெறுவர்.
மொத்தம் 175 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியில் வசிப்பவர்கள்.
பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி போன்றோர் கரோனா தொற்று பிரச்சினை காரணமாக நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்கவில்லை.
அவர்கள் காணொலி மூலம் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.
1990-ம் ஆண்டு ராமர் கோயில் கட்டுவதற்காக பாஜக நடத்திய இயக்கத்தை முன்னெடுத்தவர் அப்போதைய தலைவர் அத்வானி.
சோம்நாத் முதல் அயோத்தி வரை அவர் நடத்திய ரத யாத்திரை ராமர் கோயிலுக்காக பாஜக நடத்திய இயக்கத்தில் முக்கிய இடத்தை பிடித்தது.
இந்தநிலையில் நாளை ராமர் கோயில் பூமி பூஜை நடைபெறும் நிலையில் அத்வானி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:
”1990-ம் ஆண்டில் சோம்நாத் முதல் அயோத்தி வரை ராம ரத யாத்திரையின் வடிவத்தில் விதி என்னை ஒரு முக்கிய கடமையை செய்ய வைத்தது.
இந்த சிந்தனையை நோக்கி ஏராளமானோரின் எண்ணங்கள், ஆற்றல்கள், ஆர்வத்தை வளர்க்க உதவியது.
ராம ஜென்ம பூமி பூஜை நடைபெறும் தினம் எனக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த நாள் வரலாறு மற்றும் உணர்வு பூர்வமான நாள்.” எனக் கூறியுள்ளார்.